Sunday 24 July 2016

சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்

என்னை நானே யாரென்று
புரிய எனக்கு தேவைப்படும்
ஓர் ஆயுதம் தான் அவமானம்!
இது உண்மை என்பது போல்,
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.  அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.
நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.
நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப்
படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.
சோர்ந்து போகாதீர்
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி
யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.
மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.
ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… 

ஞானம் பெற வேண்டுமா?

உலக விவகாரங்களில் அகப்பட்டு தவிக்கிறான் மனிதன். அதுவா, இதுவா? இதை செய்யலாமா, கூடாதா? செய்தால் என்ன? ஆதாயம் கிடைக்குமானால் அதை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது. அதே சமயம், சே… இப்படி செய்வது தர்மமல்ல… மகா பாவமும் கூட! இதை செய்து, ஏன் பாவத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்போது தான் அதுவா, இதுவா என்று யோசித்து திண்டாடுகிறான் மனிதன். இதற்கு காரணம், மனம் தான்.
மனம் ஒரு குரங்கு. அது சும்மா இராது; இங்குமங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். அது போல மனம் எதையெல்லாமோ யோசிக்கும்; ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும். அப்போது, இவனுக்கு சரியான வழி காட்டுவது எது?
ஞானம், அஞ்ஞானம் என்று இரண்டு உள்ளது. பொதுவாக எல்லாரிடமும் அஞ்ஞானம் என்பது நிறைந்துள்ளது. இது, பிறவியோடு சேர்ந்து வருவது; ஞானம் என்பது பிறகு சம்பாதித்து கொள்வது. இந்த ஞானம் ஏற்படும் போது, அஞ்ஞானம் தானாகவே வெளியேறி விடுகிறது. ஞானம் ஏற்பட வேண்டுமானால், அதற்கு ஒரு குருவை தேடி அலைந்து, அவருக்கு மனம் கோணாமல் பணிவிடை செய்து, பிறகு அவரிடமிருந்து ஞானம் பெற வேண்டும்.
மனதில் தெளிவும், வைராக்கியமும் ஏற்பட்டு விட்டால் ஞானம் வரும். மனிதனுக்கு மனம், மனசாட்சி என்று இரண்டு உள்ளது. இதில், மனம் என்பது ஏதோ ஒன்றை விரும்புகிறது. இதில் நியாய, அநியாயம் கிடையாது. மனம் ஒன்றை விரும்பினால், அதை அடைய ஆசைப்படுகிறது. ஆனால், மனசாட்சி அப்படியல்ல! இது, நமக்கு கிடைக்க வேண்டியது தானா, அதை அடைவது நியாயமா என்றெல்லாம் கேள்விகள் கேட்கும்.
மனதுக்கும், மனசாட்சிக்கும் இடையே போராட்டம் நடக்கும். இதில், எது வலுவாக உள் ளதோ, அது வெற்றி பெறும். ஒருவன், ஒரு காரியத்தை செய்து விட்டு, “என்ன சார் பண்றது? மனசாட்சிக்கு விரோதமாத் தான் அதை செய்ய வேண்டியிருந்தது…’ என்கிறான்.
அதாவது, மனம் போனபடி தான் அதை செய்திருக்கிறான். இங்கே மனம் வெற்றி பெற்றுள் ளது. “நானும் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால், என் மனசாட்சி அப்படிச் செய்ய இடம் தரவில்லை; அதனால், அதை செய்யவில்லை…’ என்கிறான். இங்கே மனம் செய்யச் சொன்னதை, மனசாட்சி தடுத்து விட்டது. மனசாட்சிக்கு வெற்றி. மனதை விட, மனசாட்சி சொல்வதே மேலானது. இதை, சரியான முறையில் தீர்மானம் செய்வதற்கு தான் ஞானம் தேவைப்படுகிறது.
எத்தனையோ இன்ப, துன்பங்களில் அகப்பட்டு உழலும் மனிதனுக்கு நற்கதி கிடைக்க வேண்டுமானால், ஞானம் ஏற்பட வேண்டும். சத்தியம், அன்பு, அகிம்சை போன்றவைகள் நல்ல குணங்கள்.
இவை இருந்தால், தவறான வழியில் செல்லாமல், நேர் வழியில் செல்ல முடியும். இதற்கான தகுந்த முடிவெடுப்பது தான் ஞானம்; தவறான முடிவெடுப்பது அஞ்ஞானம். ஞானம் பெற்று, ஞானியாக வாழ்ந்து, பகவானை அடைவது நல்லதா… அஞ்ஞானியாக இறப்பது நல்லதா? இதை யோசித்து, நல்ல முடிவு செய்வது தான் ஞானம்!