Friday 22 July 2016

இதுதான் ரகசியம்

இன்று நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள், நாம் எதிர்பார்த்தபடி இல்லை. நம்மை சுற்றியிருக்கும் நட்பு, உறவு, சூழ்நிலை, சமுதாயம் போன்ற அனைத்துமே சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நாம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு கவலையுடனும், பயத்துடனும், வேதனையுடனும் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பது சரியா?
இதே மனிதர்களுடன், இந்த சூழ்நிலையில், இதே சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். இந்த வாழ்க்கையை வேதனையுடன் கழிப்பவர்கள் அதற்கு விதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். சிலரோ, `மதியால் விதியை வெல்லலாம்’ என்றும் கூறுகிறார்கள். விதியை மதியால் வெல்வதற்கான சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நம் எண்ணங்கள் மூலம், நம் உணர்வுகளை மாற்றலாம். எண்ணங்களை செம்மையாக்கி, உணர்வுகளை மேம்படுத்தி நாம் செய்யும் செயல்கள் அறிவார்ந்தவையாக இருக்கும். அதைத்தான் மதி என்று கூறுகிறோம். அந்த மதி மூலம், விதி என்ற வேதனையை, துயரத்தை நம்மால் போக்க முடியும்.
சமுதாயம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாம் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற எண்ணம் நமக்கு இருப்பது சரியல்ல. நம்மால் நம்மைத்தான் மாற்ற முடியும். மற்றவர்களை மாற்ற முடியாது. அதனால் மற்றவர்கள் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறக்கூடாது. நாம்தான் நம் எண்ணங்களை மாற்றி நம்மை நிம்மதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர், சூடாக சொல்லியிருக்கலாம். `அது அவரது கருத்து. அவர் புரியாமல் பேசி இருப்பார். ஏதேச்சையாக அப்படி கூறியிருப்பார். என்னை நோகடிப்பது அவர் நோக்கம் அல்ல..` என்பது போன்ற எண்ணங்களை நீங்களே உருவாக்கி, உங்கள் மனதை நீங்களே ஆறுதல்படுத்திக்கொள்ளவேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள். ஒருவர் உங்களைப் பற்றி ஒரே ஒரு முறை, உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை பிரயோகித்திருக்கிறார். அதை அதோடு விடாமல் நீங்கள் எத்தனை முறை உங்கள் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் ஒருமுறையோடு விட்டுவிட, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அதை நினைத்து உங்கள் மனதை புண்படுத்தவேண்டும். அவர் அப்படி பேசிவிட்டார் என்று பலரிடம்கூறி, உங்களுக்கு ஏற்பட்ட காயத்தை நீங்களே ஏன் ஆறவிடாமல் செய்யவேண்டும்.
உங்கள் மனதின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் மகிழ்ச்சி மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அன்றே, அப்போதே அந்த வார்த்தையை மறந்துவிடுவதுதானே நல்லது.
ஒருவரை நீங்கள் சரியில்லாதவர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது, சிலர் அவரை சிறந்தவர் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதை வைத்து பார்க்கும்போது எந்த மனிதரும் கெட்டவரில்லை என்பது உங்களுக்கு தெரியவரும். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனால் ஒரு மனிதரின் குறைகளை மட்டும் கண்டுபிடித்து, நம் மனதை குறைபடுத்தி, நம் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருப்பதைவிட, அவரிடம் இருக்கும் நிறையை பெரிதாக்கி, நமக்குள் நிம்மதியை உருவாக்கிக்கொள்வதுதான் நல்லது. கனி இருக்க நாம் ஏன் காயை கவர்ந்திழுக்க வேண்டும்!

நாணயத்தின்’ விலை?


நான் மிகவும் நேர்மையாகவும், நாணயமாகவும் வேலை செய்வேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அது தான் என் கொள்கை’ என்று சிலர் சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான் அப்படி எல்லாம் நீதி, நியாயம் மாறாமல் வேலை பார்த்து என்ன லாபம்? மற்றவர்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறார்கள். பொய் சொல்கி றார்கள்… ஏமாற்றுகிறார்கள்.. அரைகுறையாகத்தான் வேலைபார்க்கிறார்கள். உண்மையாக உழைத்து என்ன கிடைக்கப் போகிறது. அதை யாரேனும் பாராட்டவா போகிறார்கள்? நாண யத்திற்கும், நேர்மைக்கும் இந்த காலத்தில் மதிப்போ, மரியாதையோ இல்லவேஇல்லை. நான் மட்டும் யோக்கியமாக இருந்து பலனில்லை. ஊர் எப்படி போகிறதோ அப்படியே நானும் போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். நாணயமாக இருக்கிறீர்கள். உண்மையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
நேர்மை, நாணயம், உண்மையின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் அப்படி வாழ்கிறீர்கள். விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள் உங்களுக்கு சுயமரியாதையையும், சுய கவுரவத்தையும் கொடுக்கும். மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் அது தரும்.
உங்களுக்கு இத்தனையும் கிடைக்கும்போது மற்றவர்கள் பாராட்டினால் என்ன.. தூற்றி னால் என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
“நற்பண்புகள் என் வாழ்க்கையின் அஸ்திவாரம். அதை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த நற்குணங்கள் இன்னமும் இந்த உலகத்தில் மறைந்துவிடாமல் என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாணயமாகவும், நேர்மை யாகவும் இருப்பார்கள். அதுவே ஒரு சில லட்சங்கள் என்றாகும்போது அந்த நாணயத்தை யும், நேர்மையையும் விட்டு கொடுத்து விடுவார்கள். “நேர்மைக்கும், நாணயத்திற்கும் என்னால் விலை நிர்ணயிக்க முடியாது. நான் நானாக வாழ விரும்புகிறேன்” என்று உங்களுக்குள்ளே தினமும் கூறிக்கொள்ளுங்கள். அதன்படி வாழ்ந்து பாருங்கள். எல்லை யற்ற இன்பத்தோடு உங்களால் வாழ முடியும். அதற்குரிய பலனும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.
ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது.
உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும்.
முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை.
எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.
ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை.
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல.
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும்.
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.