Friday, 22 July 2016

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.
ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது.
உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும்.
முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை.
எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.