Friday, 8 July 2016

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, ‘பிரேக்’ கிடையாது.
ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா… கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.
ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.
‘அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல…’ என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.
இத்தகைய நபர்களுக்கு, தப்பித் தவறி, ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு துறைத் தலைமையோ, ஒரு நிறுவன உரிமையோ கிடைத்துவிடுமாயின், இவர்களுக்குக் கீழே பணி புரிபவர்கள் பாடு ரொம்பச் சிரமம்.
சொன்னதைக் கேளாதவர்களின் தன்மையைப் பார்க்க பார்க்க, மற்றவர்கள் மெல்ல இவர்களிடமிருந்து ஒதுங்க ஆரம்பிப்பர். சொல்லி என்ன பயன் என்பது மட்டுமல்ல; நம் மரியாதையைக் காப்பாற்றி கொண்டால், அதுவே போதுமானது என்பதும், ஒரு காரணம்.
‘நான் இப்படிப்பட்ட ஆள் அல்ல…’ என்று, சிலர் மறுக்கலாம்; ஆனால், நமக்குள் இருக்கும், ‘பிரேக்’ இல்லா கப்பல், அவ்வப்போது நம்மை அறியாமல் பயணப்பட ஆரம்பித்து விடுகிறது.
இதனால், நாம் இப்போது பார்த்தவர்களைப் போல், சில நேரங்களில், சில விஷயங்களில், சில சந்தர்ப்பங்களில், நாம், ‘பிரேக்’ இல்லாக் கப்பல்களாகி போகிறோம். யார் என்ன சொன்னாலும், அந்த நேரத்தில் மட்டும் காதில் ஏறுவதில்லை.
இவர்களுக்கு, சில கேள்விகள்… நீங்கள் எடுத்தது சுயமுடிவுதானா, நீங்கள் எடுக்கும் முடிவுகள் பிறர் தலையீடு செய்யாத சுயமுடிவு என்றால், உங்கள் முடிவு எத்தனை முறை சரிவர அரங்கேறியிருக்கிறது… உங்கள் முடிவின், வெற்றி சதவீதம் என்ன?
‘சரியோ, தவறோ நான் எடுப்பதே முடிவு; விளைவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை…’ என்று வாதிடுபவரா நீங்கள்? அடடே…. நானும் உங்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்; சிதறும் படகாய் ஆக எனக்கு விருப்பமில்லை.
பெரும்பகுதி சரியாகவே நடக்கும் என்கிறவரா நீங்கள்… சில நேரங்களில் மட்டும் தவறு நடக்கிறது என்கிறீர்களா… அப்படியானால் உங்களிடம் கொஞ்சம் பேசலாம்.
சில பிழைகளுக்கு விலை இல்லைதான்; ஆனால், சில பிழைகளுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறதே!
பிழையற்ற சரியான செயலா; அதெப்படி முடியும்? பிறர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்கும் போது, அதில் அவர்கள் கூறும் சாதக, பாதகங்களை அலசும் போது, ஒரே கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொண்டவர்கள் தாம் அதிகம் தவறு செய்கின்றனர் என்பது தெரிய வருகிறது.
‘ஆளாளுக்கு அபிப்ராயம் கேட்டுக் கொண்டிருந்தால், அது கட்டுபடியாகிற விஷயமா… எல்லாருமா சேர்ந்து குழப்பி விடுவர்; அதெல்லாம் சரிப்பட்டு வராது…’ என்கிறீர்களா?
பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும் போதுதான், ஒரு பொருளின் முழுப் பரிமாணமும் தெரியவருவது போல், ஒரு முடிவும் பல கோணங்களிலிருந்து பார்க்கப்படும்போது, பெரும்பாலும் பிழையற்ற முடிவு எடுப்பது சாத்தியமாகிறது. காரணம், அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட்டு விட்டனவே!
ஒரே கோணத்தில் பார்த்து தன்னிச்சையாகவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு, இனி முடிவு கட்டிவிட்டு, ஒவ்வொன்றையும் அலசி எடுத்துப் புரட்டிப் புடம் போட்ட பின், முடிவுகளை எடுத்தால், அதுவே தங்கமான முடிவாக இருக்கும்!

Thursday, 7 July 2016

ஆனந்தம் என்பது எது தெரியுமா?

ஆனந்தம் என்பது எது தெரியுமா

* தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை
அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்

ஒரே நிமிடத்தில் புண்ணியம்
* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.
* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.
* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.
* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.
* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.
* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.
* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.