Sunday 17 July 2016

மனிதனின் எண்ணத்தெளிவு:

நானொரு மாதுளைப் பழத்தின் 
இதயத்தில் வசித்து வந்தேன். 

ஒரு விதை சொன்னது, 
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன். 
காற்று என் கிளைகளுக்கிடையில் 
ராகம் பாடும், 
கதிரவன் என் இலைகளின் மேல் 
நடனம் புரியும், 
எல்லாக் காலங்களிலும் நான் 
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்." 

இன்னொரு விதை சொன்னது, 
"நானும் உன்னைப் போல் 
இளம்பிராயத்தினனாய் இருந்த போது 
இது போல் நினைத்ததுண்டு. 
இன்றோ 
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன், 
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று 
கண்டுணர்ந்துள்ளேன்." 

மூன்றாவது விதையும் பேசியது, 
"வளமானதொரு எதிர்காலத்திற்கான 
நம்பிக்கைகள் எதையும் 
நமது தற்கால வாழ்வில் 
நான் காணவில்லை." 

நான்காவது விதை சொன்னது, 
"சீச்சீ..!! 
அப்படி ஒரு நல்ல எதிர்காலம் 
இல்லாமல் போகுமானால் 
எத்தனை ஏமாற்றம்? 
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?" 

ஐந்தாவது விதை சொன்னது, 
"நாம் என்னவாக இருக்கிறோம் 
என்பதே சரியாகப் புரியாத போது 
நாம் என்ன ஆவோம் 
என்பதைப் பற்றி 
ஏன் இத்தனை சர்ச்சை?" 

ஆறாவது விதை பதில் சொன்னது, 
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ 
அதுவாகவே 
எப்போதும் இருப்போம்." 

ஏழாவது விதை சொன்னது, 
"நாம் எப்படி இருப்போம் 
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, 
ஆனால் அதை 
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை." 

இப்படியே மேலும் 
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, 
இன்னும் பலப்பல விதைகள் பேசின, 
கடைசியில் எல்லா விதைகளும் 
சேர்ந்து போட்ட கூச்சலில் 
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. 

அன்றே நான் 
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு 
இடம் மாறி விட்டேன். 
அங்கு விதைகளும் குறைவு, 
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.